கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச ஒலிம்பிக் 2020 போட்டித் தொடரை நடத்துவதற்கு வழங்கப்பட்டு வந்த அழுத்தங்களை அடுத்து அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஜுலை-24 அன்றே போட்டிகள் ஆரம்பிக்க இருப்பதால் எப்படியும் போட்டியை நடத்திவிடலாம் என போட்டியை நடத்தும் ஜப்பான் பிடிவாதமாக நின்றது. ஜப்பானில் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பு 52 ஆண்டுகளின் பின்னர் கிடைத்த வாய்ப்பை நழுவவிடக் கூடாதென்ற அடிப்படையிலும், பல்லாயிரம் கோடிகள் செலவழித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையிலும் நிலமைகளை அவதானித்து முடிவெடுக்கலாம் என ஜப்பான் காலம் தாழ்த்தி வந்திருந்தது.
இந்நிலையில் பல்வேறு நாடுகள் ஒலிம்பிக் தொடரை ஒத்திவைக்குமாறு அழுத்தங்களை பிரயோகித்த நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கொமிற்றி கடந்த ஞாயிறு ஒன்று கூடியது. எப்படியும் ஒலிம்பிக் தொடரை ஒத்திவைப்பது குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் நான்கு வாரங்களின் பின்னர் கூடி நிலமைகள் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் எனவும் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் தம்மை தயார் செய்யும்படியும் சர்வதேச ஒலிம்பிக் கொமிற்றி அறிவித்திருந்தது.
இவ் அறிவிப்பால் அதிருப்தி அடைந்த கனடா, அவுஸ்ரேலிய ஆகிய நாடுகள் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக அந்தந்த நாடுகளின் ஒலிம்பிக் கொமிற்றிகள் அறிவித்திருந்தன.
இதனால் ஏற்பட்ட அழுத்தங்கள் காரணமாக ஒலிம்பிக் தொடரை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. இத்தகவலை சர்வதேச ஒலிம்பிக் கொமிற்றி உறுப்பினர் டிக் பௌண்ட் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, பகுப்பு
Tags: உலகம்